ரெடியானது புதிய கட்சியின் பெயர்... நடவடிக்கையை துரிதப்படுத்தும் டிடிவி... அறிவிப்பு எப்போது தெரியுமா?
மதுரை மேலூரில் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரை டிடிவி தினகரன் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரு அணிகளாக செயல்பட்டபோது, தற்காலிகமாக இரட்டை இலை சின்னமும் கட்சி பெயரும் முடக்கப்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்தபிறகு, அவர்களுக்கே அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது.
அதன்பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் தினகரன். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் தங்களுக்கு குக்கர் சின்னத்தையும் அதிமுக அம்மா என்ற பெயரையும் ஒதுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்கனவே அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பலகட்ட விசாரணைக்கு பிறகு வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தேர்தல் ஆணையம் அறிவிக்கும் பெயரில் புதுக்கட்சி தொடங்க இருப்பதாகவும் இரட்டை இலைக்கு உரிமை கோரும் வழக்கை தொடர்ந்து நடத்துவேன் எனவும் தெரிவித்தார்.
நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனிக்கட்சி தொடங்குவது குறித்து டி.டி.வி.தினகரன் சென்னையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதையடுத்து மதுரை மேலூரில் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரை டிடிவி தினகரன் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.