அதிக தொகுதிகளில் ஜெயித்தால் எதிரி திமுகவுக்கோ அல்லது துரோகி அதிமுகவுக்கோ ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் இந்த துரோக ஆட்சி முடிவுக்கு வந்து மீண்டும் தேர்தல் வரும் என்றும் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் , சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால், யாருக்கு ஆதரவு அளிக்கப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

அபபோது திமுக எங்களின் எதிரி. அந்தக் கட்சிக்கு நாங்கள் எப்படி ஆதரவளிக்க முடியும்? அதிமுக எங்களது துரோகி. ஆக இருவருக்குமே ஆதரவு அளிக்க முடியாது என தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் அதிமுகவை மக்கள் மாபெரும் தோல்வியடையச் செய்வார்கள். அதன்படி ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். மீண்டும் தேர்தல் வரும் என தினகரன் அதிரடியாக தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக திமுகதான் முதலில் விசாரிக்கப்பட வேண்டும். ஏனென்றால், அம்மா மறைவுக்கு பின் அம்மாவை எங்கள் குடும்பம் கொன்றுவிட்டதாக பொய்யை கிளப்பிவிட்டதே ஸ்டாலின்தான். அவர்கள் கோயபெல்ஸ் பிரச்சாரத்தில் கெட்டிக்காரர்கள். அதற்கு பதிலடியாகத்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குகளைக் கொடுத்தார்கள்” என்று கூறினார்.

நான் பத்து வருடங்களாக அரசியலிலேயே இல்லை. கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்தேன். ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டபோது மக்கள் என்னை வெற்றிபெறச் செய்தார்கள். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவே மக்கள் விரும்புகிறார்கள். மக்களைக் கவர்வது மட்டுமே எங்களது ஃபார்முலா” என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்