40 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல், மீண்டும் 4 தொகுதிகளில் இடைத் தேர்தல் என தொடர்ந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று பிள்ளையார் பட்டிக்கு குடும்பத்துடன் சென்று தேங்காய் உடைத்து வழிபட்டார். 

மக்களவை மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக , அதிமுக என இரு பெரும் கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுடன் களம் இறங்கின.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனியாக, தில்லாக களம் இறங்கினார் டி.டி.வி.தினகரன். தனது கட்சியான அமமுகவுக்கு தமிழகம் முழுவதும் ஒரே சின்னம் வேண்டும் என பல இன்னல்களுக்கிடையே சட்டப் போராட்டம் நடத்தி பரிசுப் பெட்டி சின்னத்தைப் பெற்றார்.

இதையடுத்து கடந்த 40 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பம்பரமாக சுற்றி அமமுக வேட்பாளர்களுக்கு தினகரன் ஆதரவு திரட்டினார். அவர் செல்லும் இடமெல்லாம் திரண்ட கூட்டம் அதிமுகவினர் வயிற்றில் புளியைக் கரைத்தது என்றே சொல்ல வேண்டும்.

இதைத் தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள 4 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தினகரன் தீவிர பிரச்சாரம் செய்தார். வரும் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தினகரன் தனது குடும்பத்தினருடன் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டிக்குச் சென்று வழிபட்டார்.

அப்போது தான் நினைத்தது நிறைவேற பிள்ளையாருக்கு 101 தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தார்.