டி.டி.வி.தினகரனின் புதிய கட்சி தொடக்க விழாவுக்கே எத்தனை அதிமுக எம்எல்ஏக்கள் வர்றாங்கன்னு பாருங்க…. செந்தில் பாலாஜி அதிரடி!!
நாளை மறுநாள் டி.டி.வி.தினகரன் மதுரை அருகே மேலூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் தனது புதிய கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார். அந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ஏராளமானோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
டி.டி.வி.தினகரன் அணி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் டி.டி.வி.தினகரன் புதிய கட்சி தொடக்க விழா குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது , அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பாக இடைக்கால ஏற்பாடாக ஒரு புதிய கட்சியை நாளை மறுநாள் மதுரை மேலூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் அறிவித்து கட்சியை, கொடியை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்தார்..
இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதால் கட்சி தாவல் தடை சட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மேலும் எம்.எல்.ஏ.க்கள். தகுதி நீக்கம் தொடர்பான வழக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் செந்தில் பாலாஜி கூறினார்..