டி.டி.வி தினகரனின் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பதவியையும் பறிக்க முடியுமா என்று சட்ட நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

டி.டி.வி தினகரனின் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ பதவியையும் பறிக்க முடியுமா என்று சட்ட நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அக்டோபர் இறுதியில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தினகரன் தரப்பை பலவீனப்படுத்தும் நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கியுள்ளார். தற்போது தகுதி நீக்கத்திற்கு ஆளாகியுள்ள 18 பேரில் கணிசமானவர்களை மீண்டும் தனது ஆதரவாளராக்கும் நடவடிக்கைகளையும் அவர் முடுக்கிவிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எதிராக வந்தாலும் கூட மீண்டும் பதவியை பெறும் எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களித்தால் பதவி பறிபோகும். தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்படும். இதனை கூறியே சிலரிடம் எடப்பாடி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே தினகரன் ஆதரவாளர்களாக உள்ள எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் மற்றும் கருணாஸ் ஆகியோரின் பதவியை பறிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

இப்படியே சூட்டோடு சூடாக தினகரன் எம்.எல்.ஏ பதவியையும் பறிக்கும் பட்சத்தில் அவரது தரப்பு மேலும் பலவீனம் அடையும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். மேலும் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற ஒருவர் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரக்கூடாது. சுயேட்சை வேட்பாளர் அரசியல் கட்சியில் சேர்ந்தாலும் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க முடியும். அந்த வகையில் தினகரன் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

ஆனால் அதன் பிறகு அ.ம.மு.க எனும் கட்சியை துவங்கி அந்த கட்சிக்கு துணைப் பொதுச் செயலாளராகவும் தினகரன் செயல்பட்டு வருகிறார். இந்த காரணத்தை கூறி தினகரனிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் மூலமாக நோட்டீஸ் அனுப்பலாமா என்று எடப்பாடி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஆனால் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரோ அவசரம் வேண்டாம். இந்த விவகாரத்தில் பொறுமையை கடைபிடிக்கலாம், இந்திய அளவில் பிரபலமாக உள்ள சில வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்டு பின்னர் தினகரன் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளாராம். இருந்த போதும் தினகரன் எம்.எல்.ஏ பதவிக்கும் எடப்பாடி குறி வைத்துவிட்டதாகவே கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.