திமுக கோர்ட்டுக்கு போனால் நாங்களும் போவோம்... டி.டி.வி.தினகரன் அதிரடி முடிவு..!
உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக உச்சநீதிமன்றத்துக்கு போனால் அமமுகவும் கோர்ட்டை நாடும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிரடியாக தெரிவித்தார்..
தர்மபுரி மாவட்டம் அரூரில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முறைப்படி நடத்த வேண்டும். இடஒதுக்கீட்டை சரியான முறையில் வரையறை செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை ஒதுக்கி விட்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தலை நடத்தி, ஆளும் கட்சி பதவி அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் உள்ளதாக அனைத்து அரசியல் கட்சிகளும் தெரிவிக்கின்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவோம். அவ்வாறு சின்னம் ஒதுக்க கோரி கோர்ட்டை நாடுவோம்.
எங்களுக்கு நீதி தேவதை துணை இருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் கோர்ட்டை நாடினால், அமமுக கோர்ட்டை நாடும் என தெரிவித்தார்..
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் தேதி 27 மற்றும் 30 என்பது ஜோசியம் பார்த்து அதன்படி முடிவு செய்துள்ளார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. பண பலத்தை வைத்து வெற்றி பெற்றது.
மத்திய அரசுக்கு இப்போது தான், இவர்கள் யார் என்பது புரிந்துள்ளது. மத்தியில் ஆள்பவர்கள் இவர்களை கைவிட்டால் நிச்சயம் இந்த ஆட்சி நீடிக்காது என கூறினார்.