தினகரன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? டெல்லி போலீசை குடைந்தெடுத்த நீதிபதி…
இரட்டை இலை சின்னத்தை லஞ்சம் கொடுத்துப் பெற முயன்ற வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வரும் டி.டி.வி.தினகரன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என டெல்லி போலீசாரை நீதிபதி கேள்விகளால் துளைத்தெடுத்தார்
இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கடந்த வாரம் சுகேஷ் சந்திரசேகர் என்ற அரசியல் தரகரரை, டெல்லி போலீசார் 1 கோடியே 30 லட்சத்துடன் பணத்துடன் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், அதில் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றதாகவும் கூறினார்.
இதனையடுத்து தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக டெல்லி சாணக்கியபுரம், காவல் நிலையத்தில் கடந்த நான்கு நாட்களாக தினகரனிடமும், சுகேஷ் சந்திரசேகரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சுகேசை மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் 3 நாட்கள் மட்டுமே போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
அப்போது தினகரன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு போலீசார், தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மட்டுமே தற்போது விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.
அதே நேரத்தில் டி.டி.வி.தினகரன் - சுகேஷ் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்த ஆதாரங்களை டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பித்தனர்.