இனி எதுவும் செய்யமுடியாது என கைகளை தலைக்குமேல் தூக்கிவிட்டதா அரசு..!! டிடிவி தினகரன் கேள்வி...!!
அப்படி என்றால் இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாத மோசமான நிலைக்கு பழனிச்சாமி அரசு வந்துவிட்டதா.
கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை எடுக்கலாம் என்ற திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது , தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு பழனிச்சாமி அரசு வந்துவிட்டதா.? என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார் , இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :- கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும் செய்யமுடியாது என கைகளை தலைக்குமேல் தூக்கி விட்டார்களோ என்ற பீதியை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது . சென்னை உட்பட தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது மூன்றே நாட்களில் கொரோனாவை மொத்தமாக ஒழித்து விடுவோம் என்று கடந்த மாதம் சொன்ன முதலமைச்சர் பழனிசாமி தற்போதைய மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது தெருக்கள் குறுகலாக உள்ளன பொது கழிவறைகளை பயன்படுத்துகிறார்கள் என நோய் பரவுவதற்கான காரணங்கள் பற்றி புதிய கண்டுபிடிப்புகளை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதேநேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4000 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார் ஆனால் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இடமில்லாத அளவுக்கு நோயாளிகள் நிரம்பி வழிவதாக வரும் செய்திகள் முதலமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை.? மேலும் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சரியான நேரத்தில் உணவு உள்ளிட்டவற்றை வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது , அரசு மருத்துவமனைகளில் நெரிசலை குறைக்க முழுமையாக குணமடையாத நோயாளிகளை விருப்பப்பட்டால் வீட்டுக்குச் செல்லலாம் என்று கூறி அனுப்பி வைக்கும் பொறுப்பில்லாத செயல்களும் நடப்பதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலை அளிக்கின்றன , இவை எல்லாவற்றையும் விட இனி கொரோனாவால் பாதிக்கப் படுபவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு அவரவர் வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் திடீரென அறிவித்திருப்பது மக்களிடம் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது,
வீட்டிலிருந்தபடியே அவரவர் சாப்பிடவேண்டிய மருந்துகளையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார் , அப்படி என்றால் இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாத மோசமான நிலைக்கு பழனிச்சாமி அரசு வந்துவிட்டதா.? நோயால் பாதிக்கப்படும் எல்லோரின் வீட்டிலும் அந்த அளவுக்கு வசதிகள் இருக்குமா அதிலும் சென்னை போன்ற பெரு நகரத்தில் நோய்த்தொற்று ஆளானவர்கள் முதலமைச்சர் பழனிச்சாமி முன்பு சொன்னபடி பணக்காரர்கள் இல்லையே , இட நெருக்கடியான சூழலில் தானே வாழ்ந்து வருகிறார்கள் வீட்டில் ஒரே படுக்கை அறை கொண்டும், அதுவும் இல்லாத நிலையில் உள்ள அடித்தட்டு மக்களும் தானே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எப்படி வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற முடியும் அப்படி அறிகுறியே இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது என்ற கேள்விகள் எழுகின்றன , கொரோனா பேரிடர் தொடக்கம் முதலே அலட்சியத்தாலும் அகங்காரமும் எல்லாவற்றையும் மூடி மறைத்தே பேசி வந்த ஆட்சியாளர்கள் இதன் பிறகாவது தங்களின் ஈகோவை விட்டு ஒழித்து உண்மையைக் கூறி மக்களை காப்பாற்ற தேவையானவற்றை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .