பேட்டி கொடுத்தா மட்டும் போதுமா ? எப்பதான் வேலூரில் இருந்து தண்ணி வரும் !! எடப்பாடியை மடக்கிய தினகரன் !!
வேலூரில் இருந்து தண்ணீர் வரும்.. வரும் என்று எடப்பாடி பழனிசாமியும், வேலுமணியும்பேட்டிதான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் எப்போதான் தண்ணீர் கொண்டு வருவீங்க என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , கடல்நீரை குடிநீராக்கும் புதிய திட்டதிற்கு அடிக்கல் நாட்டுவதையே பழனிசாமி அரசு பெரிய விழா எடுத்து கொண்டாடி வரும் நிலையில், ராமநாதபுரத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள ஆலையே முடங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதனை உடனடியாக செயல்படுத்துவது உட்பட குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலைகிறார்கள். சென்னையில் மிக மோசமாக உள்ளது. கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா என்பதை ரயில்வே துறையிடம் ஆலோசிக்காமல் ரயிலில் தண்ணீர் கொண்டு வரப்போவதாக அறிவிக்கிறார்கள்.
முதலமைச்சரும், அமைச்சர் வேலுமணியும் பேட்டி கொடுக்கிறார்களே தவிர இதுவரை வேலூரில் இருந்து தண்ணீர் வந்தபாடில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் எந்திரங்கள் பழுதடைந்து உள்ளன. அதனை சீரமைக்க ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்காததால் முடங்கி இருப்பதாக வெளியாகி உள்ள செய்தி வேதனை அளிக்கிறது.
எனவே ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். திசைதிருப்பும் அறிவிப்புகளுக்குப் பதிலாக குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.