TTV Dhinakaran Theme song for Rk nagar By election
தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவும், அரசியலும் ‘மாற்றான்’ சூர்யாக்களைப் போல் ஒட்டி வாழ்பவை, ஒட்டி அலைபவனை திரிபவை, ஒட்டி வெல்பவை, ஒட்டியே வீணாக போபவை.
அரசியலைப் பார்த்து சினிமாவில் கெத்துக் காட்சிகள் வைப்பதுபோல் சினிமாவைப் பார்த்து அரசியலிலும் சில மாஸ் சீன்களை நிஜமாய் உருவாக்கும் பழக்கம் துவங்கி வெகுநாட்களாகிவிட்டது.
மாஸ் ஹீரோக்களின் படங்களில் ’இன்ட்ரோடக்ஷன் சாங்’குகள் பட்டையை கிளப்புவதுபோல் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், விஜய்காந்த் என அத்தனை அரசியல் தலைவர்களுக்கும் கடந்த சில காலங்களுக்கு முன்பே கெத்துப் பாடல்கள் உருவாகின.
இதில் மக்கள் மற்றும் தொண்டர்களின் மனங்களில் நிறைந்தவை, இரண்டுதான்.
ஒன்று ஜெயலலிதாவின்...
“தங்கத்தாரகையே வருக! வருக! வருக!
இம்மண்ணின் தேவதையே வருக! வருக! வருக!” எனும் பாடல்.
அதேபோல் கருணாநிதிக்காக உருவான...
“முத்தமிழே நீ வாழ்க! முழு நிலவே நீ வாழ்க!
வாழ்க!”
எனும் பாடல்.

இந்த இரு தலைவர்களின் பொதுக்கூட்டங்களில் அத்தலைவர்கள் வருகையை உணர்த்துவதற்கு இந்தப் பாடல்தான் ஒலிக்கப்படும். அதிலும் அ.தி.மு.க. கூட்டங்களில் தொண்டர்கள் குய்யோ முறையோ என ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பர். திடீரென இந்தப் பாடல் ஒலிக்க துவங்கியதும் ‘அம்மா வந்தாச்சு! அம்மா வந்தாச்சு!’ என்றபடியே ஒரு நிசப்தம் நிலவும்.
பேக்கிரவுண்டில் இந்த பாடல் ஒலிக்கல், ஒலிக்க ஜெயலலிதா அப்படியே வணங்கியபடி வரும் காட்சி இருக்கிறதே! சிலிர்க்க வைக்கும் பொழுதுகள் அவை.
இதற்கு சற்று குறைவில்லாதது கருணாநிதியின் மேடை. முத்தமிழ் பாடல் இசைக்க, இசைக்க சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் மேடைக்கு அவர் வரும் அழகே அழகு.

சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து, அதே மாஸுடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்துக்காக ஒலிக்கப்படும் ‘ஏழு இமய மலை, எங்க ஊரு சாமிமலை’ பாடல் கெத்துதான் ஆனாலும் முன்னவர்களின் பாடலுக்கு இருக்கும் ஆத்மார்த்தமும், மரியாதையும் அதில் தெரியாது. ரசிகனை ஆட வைக்கும் விஜயகாந்த் பாடல், ஆனால் தொண்டர்களை உறைய வைக்கும் அந்த இரு தலைவர்களின் பாடல்.
ஜெ., மறைவுக்குப் பிறகு சசி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆன பின் அவருக்கும் இப்படி தீம் சாங் தயார் செய்தார்கள். ஆனால் அது சசி சட்டென்று சிறையில் முடங்கியது போல் அந்தப் பாடலும் சி.டி.க்குள் முடங்கிவிட்டது.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் பட்டையை கிளப்பி பட்டாசு கொளுத்தும் தினகரனுக்காக தீம் பாடல் தயாராகி உள்ளது.

‘புரட்சித் தலைவர் தொகுதி இந்த தொகுதி,
அம்மாவோட மக்கள் இந்த மக்கள்
சின்னம்மாவோட கனவை நனைவாக்க
ஒரு வைரம் வருதப்பா! ஒரு வைரம் வருதப்பா!” எனும் வரிகள் ஓங்கி ஒலிக்க,
அனிமேஷனில் ஆரம்பிக்கும் விஷூவல் அடுத்தடுத்து ஜெயலலிதாவின் பழைய வீடியோ கிளிப்பிங்ஷோடு நகர்கிறது. செண்டை மேளம் அதிர அதிர ’வாக்களிப்பீர் அண்ணனுக்கு, நம் தலைவர் டி.டி.வி’ என்று வக்கனையாய் வாக்கு கேட்கிறார்கள்.
‘புதிய வெளிச்சத்தை உருவாக்குவோம்,
நம் குரலை தேசமெங்கும் ஒலிக்கச் செய்வோம்!’
- என்று பட்டையை கிளப்புகிறது பாடல்.

யூடியூபில் இந்த பாடலுக்கு இன்று வரை 90 கமெண்டுகள் விழுந்திருக்கின்றன. இவற்றில் 95% தினகரன் வெல்லணும், வெல்வார்! மாஸ் தலைவர் டிடிவி! மதுசூதனனை தோற்கடிக்கும் மன்னவனே!...என்று போட்டுப் புகழ்ந்துள்ளார்கள்.
ஏதேது ராஜநாயகம் சொன்னது உண்மைதான் போலிருக்குதே! என்னாங்கடா அது ஒரே புகையா கிளம்புது! ஓ ஓ ஓ...அது கிரீம்ஸ் சாலையில இருந்து வர்ற வயிற்றெரிச்சலா?...என்று ஒருவர் கமெண்ட் போட்டு ஹைலைட்டாக கலக்கியுள்ளார்.
