எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என நினைத்தோமோ அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கிறது- டிடிவி தினகரன்
தி.மு.க.வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்கிறது. தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் நிறுவனத்தை மிரட்டிய திமுக எம்எல்ஏ
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசபுரம் பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம், ஒருவருடைய இடத்தை குத்தகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறது.குத்தகை காலம் 2028 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் தனியார் நிறுவன அதிகாரியை தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா இடத்தை காலி செய்யும் படி கூறியதாக வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தாம்பரம் காவல்நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவின் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எதற்கு பயந்தோமா அது நடந்துவிட்டது
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன, மக்களை மிரட்டுவது, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை காலி செய்யச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட தி.மு.க.வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்கிறது. தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொல்லாததையும் செய்த திமுக
மற்றொரு டுவிட்டர் பதிவில், மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய தி.மு.க அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் இஷ்டம்போல் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டு மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு அடுத்தடுத்து தி.மு.க அரசு செயல்பட்டு வருவதற்கு இது இன்னொரு சான்று. மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது. இதுதான் திரு.ஸ்டாலின் அடிக்கடி கூறும் 'சொல்லாததையும் செய்வதோ?! என அந்த பதிவில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்