தேமுதிகவுடன் கூட்டணி வைக்க காரணம் என்ன?... அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ‘பளீச்’ பதில்...!
இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அதிமுக கூட்டணியில் மிகக்குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டிய தேமுதிக, அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. உடனடியாக டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றன. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான ஒப்பந்தத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கையெழுத்திட்டார். அவர் கோவில்பட்டியில் இருந்ததால் அந்த ஒப்பந்தத்தை அமமுக துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன், தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவனிடம் அளித்தார். கூட்டணி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் ஆனபோது டிடிவி தினகரன் சென்னையில் இல்லாததால், விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தினகரன் சந்திப்பார் எனக்கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இருவரும் தேர்தல் பரப்புரை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தினகரனிடம், அமமுக - தேமுதிக கூட்டணி கொள்கை அடிப்படையிலானதா? அல்லது தேர்தலுக்கான கூட்டணியா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிடிவி, “தமிழ்நாட்டில் தீய சக்தியான திமுகவையும், துரோக சக்தி அதிமுகவையும் ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதற்காகவும், ஊழலற்ற, தமிழக மக்களுக்கு நன்மைபயக்க கூடிய ஆட்சியை தரும் கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார். ஒரே கொள்கை இருந்தால் ஒரே கட்சியாக இருந்துவிட்டு செல்லலாமே?. எங்களுடைய ஒரே நோக்கம் திமுக, அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்பது தான் என திட்டவட்டமாக தெரிவித்தார்.