7 ஆவது நாளாக தொடரும் பஸ் ஸ்ட்ரைக் …. இன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகை….
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். நேற்று குடும்பத்தினருடன் போக்குவரத்துதுறை அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள், இன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 7 நாட்களாக நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் போக்குவரத்து முடங்கியுள்ளது. பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நிலைமையை சமாளிக்க அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து அரசுப் பேருந்துகளை இயக்கி வருகிறது.
அரசு, தொழிற்சங்கங்கள் என இரு தரப்பினரும் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே செல்கிறது.
இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே நேற்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்துறை ஊழியர்கள் தங்கள் குடம்பதிதினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
அதே நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். முதலமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி ஜனவரி 11-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நிதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாமல் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.