காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதில் பங்கேற்க உள்ளன.

நாளை நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தில் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் ரயில்வே போலீசாரும், மாநில சட்டம் - ஒழுங்கு போலீசாரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே ரயில் நிலையம் வரும் அரசியல் கட்சியினரை நுழைவு வாயிலேயே கைது செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த முறை விவசாய சங்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, ஒரு சில இடங்களில் மட்டுமே போராட்டக்காரர்கள் ரயிலை மறிக்க முடிந்தது. முக்கிய ரயில் நிலையங்களான சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினரால், ரயில் நிலையத்துக்குள் புகுந்து மறியலில் ஈடுபட முடியவில்லை.
அதேபோன்று இந்த முறையும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனாலும், அரசியல் கட்சியினரோ, ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு ரயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்ய திட்டமிட்டுள்ளனர்.
