குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி... உயர்கிறது மதுபானங்களின் விலை... டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவு..!
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்பு இந்த விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்த உள்ளதால் பழைய விலை மது பானங்களை விற்பனை செய்து முடிக்க அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதனையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டன. கடந்த் மாதம் மீண்டும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டதோடு மாற்றப்பட்டு உள்ளன. பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வந்த மதுக்கடைகள் தற்போது காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது.
மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதிலும் இன்னும் பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதை தவிர்க்க மதுபானங்கள் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து மதுபான கடைகள் திறக்கப்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அது போல தற்போதும் உயர்த்துவதற்கு திட்டமிட்டு உள்ளனர். குறைந்த ரக மதுவகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபானங்களுக்கு 30 ரூபாயும், உயர்ரக மதுபானங்களுக்கு 50 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுபானங்களின் விலை உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் குடோன்களில் தேங்கியுள்ள மதுபானங்களை விற்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்பு இந்த விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.