Traffic SI thamarai selvan suspend
சென்னை தரமணியில் போலீசார் தாக்கிய விரக்தியில் கார் ஓட்டுநர் மணிகண்டன் தீக்குளித்த சம்பவத்தில் வேளச்சேரி போக்குவரத்து எஸ்.ஐ., தாமரைச் செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை கமிஷனர் பிறப்பித்தார்.
திருநெல்வேலி மாவட்டம். சங்கரன்கோவில் அருகேயுள்ள பனவடலிசத்திரத்தைச் சேர்ந்தவர் ரா.மணிகண்டன் இவர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து கால் டாக்ஸி ஓட்டி வருகிறார்.
மணிகண்டன் கடந்த புதன்கிழமை வேளச்சேரியில் ஒரு பயணியை இறக்கி விட்டு தரமணி ராஜீவ்காந்தி சாலையில் காரில் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சிக்னல் அருகே வந்தபோது வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் போலீஸார் அவரது காரை தடுத்து நிறுத்தினர்.
மணிகண்டன் காரை விட்டு இறங்கி போலீஸாரிடம் ஆவணங்களுடன் சென்றபோது, அவற்றை சரி பார்த்த போலீஸார், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக அபராதம் விதித்திருப்பதாக கூறினராம். இதைக் கேட்ட மணிகண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது போலீஸாருக்கும், மணிகண்டனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதனால் மணிகண்டன் தனது செல்போனில் அவர்களை விடியோ படம் எடுக்க முயன்றதாகத் தெரிகிறது.

இதையடுத்து போலீஸார் மணிகண்டனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அத்துடன் அவரது வாகன ஓட்டுநர் உரிமம், செல்போன் ஆகியவற்றை பறித்த போலீஸார், வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலையத்துக்கு வரும்படி கூறியுள்ளனர்.
இந்நிலையில், மணிகண்டன் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை மையத்துக்குச் சென்று, பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு மீண்டும் வந்த அவர், தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இதையடுத்து போலீஸார் தங்கள் வாகனத்திலேயே மணிகண்டனை தூக்கிச் சென்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மணிகண்டனை மருத்துவமனையில் சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர் போக்குவரத்து போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கார் ஓட்டுநர் மணிகண்டன் தீக்குளித்த சம்பவத்தில் வேளச்சேரி போக்குவரத்து எஸ்.ஐ., தாமரைச் செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்தார்.
