பரபரப்பு ….. விறுவிறுப்பு…. இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை…. துப்பாக்கிசூடு பிரச்சனையில் அனல் பறக்கப் போகுது ….
பரபப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப் பேரவை இன்று தொடங்குகிறது. இன்று காவிரி மேலாண்மை வாரியம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் இன்று சட்டப் பேரவைக்குள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபையில், மார்ச், 15ல், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம், மார்ச் மாதம் , 22 வரை நடந்தது. அதன்பின், மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெற, இன்று காலை, 10:30 மணிக்கு, சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது; ஜூலை, 9 வரை நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி பிரச்னை எழுப்ப உள்ளன. சபாநாயகர் பேச அனுமதிக்காவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1,000க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சட்டசபை வளாகத்திற்குள், தலைமை செயலக ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை மட்டும் அனுமதிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத் தொடரில், துப்பாக்கிச் சூடு சம்பவம், நிர்மலாதேவி விவகாரம், குட்கா ஊழல் உட்பட, பல்வேறு பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அவற்றுக்கு பதில் அளிக்க, ஆளும் கட்சியினரும் தயாராகி உள்ளனர். எனவே, சட்டசபை கூட்டத்தில், தினமும் அனல் பறக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டப் பேரவையில் இன்று வனத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை, மானிய கோரிக்கை மீதான , விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.