today neet exam results

நாளை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் தேர்வு முடிவுகள் இன்றே வெளிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வுகளை 13 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.

மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து கடந்த மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி.யின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கம்போல் மாணவர்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதும் கேள்வியை எழுப்பியது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது. இந்நிலையில், நீர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 க்கு ரிசல்ட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.