டெங்குவை கட்டுப்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; மரக்கன்று நடும் விழாவில் நடிகர் விவேக் கோரிக்கை
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 86-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருகின்றனர்.
மறைந்த அப்துல் கலாமின் 86-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்தில், கலாமின் சகோதரர் முத்து முகம்மது மீரா மரைக்காயர் தலைமையில் கலாமின் குடும்பத்தினர், கலாமின் நினைவிடத்தில் சிறப்பு தொழுகை நடத்தி அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா, தனது ஆதரவாளர்களுடன் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். கலாமின் உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நாடு முழுவதிலும் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த சுற்றலா பயணிகள், கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கலாமின் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை, பெசன்ட் நகரில் மரக்கன்று நடும் விழா நடத்தப்பட்டது. நடிகர் விவேக், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய தலைவர் சாந்தா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டு வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், டெங்குவை கட்டுப்படுத்த அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழகத்தில் அதிக அளவில் மரங்களை நடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.