பிரியங்கா காந்தி கைதை கண்டித்து, நாளை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்து இருக்கிறது.
சென்னை: பிரியங்கா காந்தி கைதை கண்டித்து, நாளை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்து இருக்கிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் ஓயவில்லை. அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. அதனை தொடர்ந்து மோதல் பலி, துப்பாக்கிச்சூடு என கடும் வன்முறை வெடித்தது.

லக்கிம்பூர் வன்முறையில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இந் நிலையில் அவரது கைதை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஆங்காங்கே போராட்டங்களை அறிவித்து, உத்தரப்பிரதேச அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் பிரியங்கா காந்தி கைதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்த கண்டன போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டு உள்ளார்.
