சட்டையில் சின்னம்.. சர்ச்சையை கிளப்பிய உதயநிதி.. தேர்தல் விதிகளை மீறிய உதயநிதி?
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.
மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. வாக்குப்பதிவு மையங்களில் இன்று நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவியுடன் வாக்களித்தார். உதயநிதி ஸ்டாலின் ‘உதயசூரியன்’ சின்னம் பொறித்த சட்டையை போட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஏன் ? தேர்தல் அலுவலர்கள் தடுக்கவில்லை என்று கேள்வி எழுந்து இருக்கிறது.
ஏற்கனவே சிவகாசியில் 26வது வார்டு பகுதியில் வாக்கு அளிக்க வந்த பெண்கள், உதயசூரியன் சின்னம் பொறிந்த புடவை அணிந்து வந்திருந்தனர். இதனையடுத்து அந்த பெண்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலினின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.