TN Local Body Elections 2022 : பண மழை பொழிகிறது.. தேர்தல் ஆணையம் இருக்கிறதா ? டிடிவி தினகரன் கேள்வி !
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள வார்டுகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன.
மாநிலம் முழுவதும் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. வாக்குப்பதிவு மையங்களில் இன்று நடைபெறும் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு இயந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். தற்போது சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். வாக்களித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ திமுக, அதிமுகவினர் அதிகளவில் ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளனர். இதனால் மக்கள் பணம் மக்களுக்கே வந்துள்ளது. வாக்களிக்கும் போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பண மழை ஆறாக பொழிகிறது. தேர்தல் ஆணையமும், காவல்துறையும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியம் இல்லாதது’ என்று கூறினார்.