எடப்பாடியின் அதிரடி ஆட்டத்தால் ஜகா வாங்கிய தலைமைச்செயலக ஊழியர்கள்.. போராட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவிப்பு !!
9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக வரும் வெள்ளிக் கிழமை முதல் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்த தலைமைச் செயலக ஊழியர்கள் தற்போது எடப்பாடி அரசின் அதிரடி நடவடிக்கையை அடுத்து ஜகா வாங்கியுள்ளனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றால் சஸ்பெண்டு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் பாயும் என அரசு எச்சரித்தது. ஆனாலும் ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக வரும் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடஉள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
ஆனால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து இன்று 95 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தலைமைச் செயலாக ஊழியர்களின் இணைப்புச் சங்கமாக உள்ள 60 துறை வாரியான சங்கங்கள் தற்போது போராட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது.
தலைமைச் செயலாளரின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.