‘இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான், இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது’ என்று திமுகவை கிண்டல் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு :
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'சொத்து வரியில் பல ஆண்டுகளாக, எவ்வித உயர்வும் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து, செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், சொத்து வரியை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீத உயர்வுl 601 - 1,200 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம் உயர்வு என்றும், 1,201 - 1,800 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதம் உயர்வு, 1,800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு, 100 சதவீதம் உயர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள, சொத்து வரியில் வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 100 சதவீதம்; தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு, 75 சதவீதம் உயர்வு. நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள தமிழக அரசும், மாநகராட்சிகளை பொறுத்தவரை, அந்தந்த மாநகராட்சிகளே தீர்மானம் பெற்றும் வரி சீராய்வு மேற்கொள்ள அரசு அறிவுரை வழங்கியுள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கிண்டல் :

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது’ என்று திமுகவை கிண்டல் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
