திமுக எம்.பி.க்காக காத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி... திமுகவினர் வந்த பிறகே பாலத்தை திறந்தார்!
இந்த விழாவில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் திமுகவைச் சேர்ந்த சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பபட்டிருந்தது. அவர்கள் இருவரும் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது
சேலம் மாநகரத்தில் இன்று நடைபெற்ற ஈரடுக்கு பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக எம்.பி.யும் எம்.எல்.ஏ.வும் வரும் வரை காத்திருந்த சம்பவம் நடைபெற்றது.
சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டில் ஐந்து சாலைப் பகுதியில் இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஈரடுக்கு மேம்பால கட்டுமான பணிகளுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். அந்தப் பணிகள் முடிவடைந்ததையடுத்து அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஈரடுக்கு பாலத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
இந்த விழாவில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் திமுகவைச் சேர்ந்த சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோரையும் அழைத்திருந்தார்கள். அவர்கள் இருவரும் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இன்று காலை விழா நடக்கும் பகுதிக்கு முதல்வர் பழனிசாமி வந்துவிட்டார். திமுக மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்க வந்தனர், ஆனால், பாலம் திறக்கும்போது அவர்கள் அருகே இல்லை. எனவே திமுக எம்..பி.யையும் எம்.எல்.ஏ.வையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேடினார். அவர்களை அதிகாரிகள் அழைத்துவந்தனர். அவர்கள் வரும்வரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காத்திருந்தார். அவர்கள் இருவரும் வந்த பிறகே இருவரையும் வைத்துக்கொண்டு மேம்பாலத்தை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது அதிமுகவினரும் திமுகவினரும் மாறிமாறி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டபோது அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதேபோல திமுக உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிட்டபோது திமுகவினர் முழக்கம் எழுப்பினர்.