இரவு 11 மணி... கொரோனா கட்டளை மையத்துக்கு விசிட் அடித்த மு.க. ஸ்டாலின்.. வந்த போன் அழைப்பிலும் பேசிய முதல்வர்!
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டளை மையத்தில் (வார் ரூம்) முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாப் பரவி வரும் நிலையில், அதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் போன்றவற்றை ஒருங்கிணைப்பதற்காக கட்டளை மையம் என்ற ‘வார் ரூம்’ திறக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் கொரோனா கட்டளை மையம் இயங்கி வருகிறது. கட்டளை மையத்தைத் தொடர்புகொள்ள தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மையத்துக்கு நேற்று இரவு 11 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்து, அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது வந்த அழைப்பிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் பல அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் வசதி, வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவை குறித்து அப்போது ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டளை மையத்திற்கு வரும் அழைப்புகளை ஏற்று அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படியும் ஸ்டாலின் உத்தரவிட்டார்.