அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிரடி?... 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!
விரைவில் காகிதமில்லாத சட்டப்பேரவையாக தமிழக சட்டப்பேர்வை உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள மாநில சட்டப்பேரவைகளின் நடவடிக்கைகளை காகிதம் இல்லாத வகையில் மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தேசிய ‘இ-விதான்’ என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘நேஷனல் இ-விதான்-நேவா’ அதாவது ‘காகிதமில்லா சட்டப்பேரவை’ திட்டம் தற்போது தமிழகத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இமாச்சல பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாவட்டங்களில் காகிதமில்லா சட்டப்பேரவையாக மாற்றப்பட்டு, அங்குள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் டேப்லட் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழக சட்டப்பேரவையில் உள்ள 234 உறுப்பினர்களுக்கும் டேப்லட் வழங்கப்பட உள்ளது. மின் ஆளுமை திட்டத்தின் கீழ் வைஃபை மற்றும் ப்ளூடூத் வசதியுடன் கூடிய டேப்லட் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்ற முன் வடிவு, நிதி நிலை அறிக்கை, சட்டப்பேரவை நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுக்கும் உறுப்பினர்களுக்கு டேப்லட் வாயிலாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. வர உள்ள அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘காகிதமில்லா சட்டப்பேரவை’ செயல்படுத்துவதன் மூலம் காகிதப் பயன்பாடு வெகுவாகக் குறைக்கப்படும். அதேபோல், அஞ்சலகச் செலவு உள்ளிட்ட இதர செலவுகளும் குறைக்கப்படும். இதன்மூலம் வேகமாக தொடர்பு கொள்ளுதல் மற்றும் முடிவுகள் எடுப்பதற்கும் வழிவகையாக அமைய உள்ளது.