மூன்று மடங்கு உயர்வு.. தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு.. டிடிவி தினகரன் காட்டம்!
அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்சார பயனீட்டு அளவு மின்சார வாரியத்தால் எடுக்கப்படவில்லை. இதனால், முந்தைய மாதம், 2019-ஆம் ஆண்டு கட்டணம் ஆகியவற்றை பலரும் செலுத்தினர். இந்நிலையில் தற்போது மின் பயனீட்டு அளவு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடும் மின் கட்டணத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துவருகிறார்கள். அதிகப்படியான மின் கட்டணம் தொடர்பாக பலரும் சமூக ஊடங்களில் அதை வெளிப்படுத்திவருகிறார்கள்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பயன்பாட்டு அளவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, மூன்று மடங்கு வரை அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் அல்ல.
கொரோனா பேரிடரால் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வரும் மக்களுக்கு அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு, கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. வெளிப்படையான நிர்வாகம் பற்றி நிறைய பேசும் திமுக அரசு மின் கட்டண விவகாரத்தில் மக்களிடம் இப்படி மறைமுகமான கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுவது ஏன்?" என டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.