திமுகவில் மூன்று முதலமைச்சர்கள்... பாஜக அண்ணாமலை பகீர் விமர்சனம்..!
தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர். ஒன்று ஸ்டாலின், இரண்டாவது உதயநிதி, மூன்றாவது ஸ்டாலின் மருமகன் சபரீசன்
பாஜகவை பிரதானபடுத்தி திமுக எதிர் அரசியல் செய்வதால் திமுகவிற்கு எதிரி பாஜக, பாஜகவிற்கு எதிரி திமுக.; அதிமுக பிரதான சட்டமன்ற எதிர்க்கட்சி, ஆகையால் தமிழ்நாடு சார்ந்த கேள்விகளை எழுப்பி வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை, ஆத்திகுளம் பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசனை சந்தித்து அவரது தந்தை மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறேன். ஊரடங்கு தளர்வால் உள்ளரங்கு கூட்டங்களை நடத்த உள்ளோம். சிந்தாந்த அடிப்படையிலான கட்சிதான் பாஜக. திமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டுவோம், அப்போது மக்கள் எங்கள் பக்கம் வருவார்கள். மோடியின் நலத் திட்டங்களால் தமிழகத்தில் மூன்றரை கோடி மக்கள் பலன் அடைந்துள்ளனர். இதன் காரணமாக பாஜகவுக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தனி மனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பாஜக யாருடைய பேச்சையும் ஒட்டு கேட்காது. ஒட்டுக் கேட்பது குறித்து யூகத்தின் அடிப்படையில் மட்டுமே குற்றம் சாட்டி வருகிறார்கள். பெகாசஸ் ஸ்பைவேரிடம் எண்கள் இருப்பதால் ஒட்டு கேட்கப்பட்டது என்பது உண்மையல்ல. அரசியல் காரணத்துக்காக ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்ட செய்தியால்தான் ஒட்டுக் கேட்பு விவகாரம் பெரிதாக பேசப்படுகிறது.
திமுகவுக்கு பாஜகதான் எதிரி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்கிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல திமுகவில் தற்போது மூன்று முதல்வர்கள் உள்ளதுதான் திமுகவின் சித்தாந்தம். தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர். ஒன்று ஸ்டாலின், இரண்டாவது உதயநிதி, மூன்றாவது ஸ்டாலின் மருமகன் சபரீசன்’’என அவர் தெரிவித்தார்.