மாட்டிறைச்சி விவகாரத்தில் தலையிடக்கூடாது…தமிழிசைக்கு தொடரும் கொலை மிரட்டல்…
மாட்டிறைச்சி விவகாரத்தில் இனிமேல் தலையிடக் கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இறைச்சிக்காக விலங்குகள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த தடைச் சட்டத்துக்கு எதிராக முதல் குரல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் இச்சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த 4 மாநிலங்களும் மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை அமல் படுத்த முடியாது என தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மாட்டிறைச்சித் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை தொடர்ந்து மாட்டிறைச்சி தடைச் சட்டத்துக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது என தமிழிசைக்கு மர்மநபர்கள் சிலர் தொலைபேசியில் 2 முறை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாட்டிறைச்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது, இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடம் என தமிழிசைக்கு மர்ம நபர்கள் சிலர் கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து ஏற்கனவே பதிவு செய்துள்ள வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.