பாஜகவில் இணைய போறேனா..! அலறி துடித்து விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்
அதிமுகவில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோப்பு வெங்கடாசலம், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருவாய் துறை அமைச்சராக செயல்பட்டார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர், ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் கூட மோதலில் ஈடுபட்டார். இதன் காரணமாக கடந்த 2021ல் சீட் வழங்கப்படாத காரணத்தால் அதிருப்தியில் இருந்த தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதனையடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பாஜகவில் இணைகிறேனா..?
திமுகவில் தோப்பு வெங்கடாசலத்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது. இதன் காரணமாக பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவல் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இந்த தகவலை மறுக்கும் வகையில் தோப்பு வெங்கடாசலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார்கள். இது உண்மைக்கு மாறான ஒரு செய்தி. தற்போது வரை நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் இருந்து வருகிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர்? வெளியான பரபரப்பு தகவல்!!