" திருப்பி அனுப்ப இது என்ன காதல் கடிதமா "..? பழைய திமுகவை பாக்கபோறீங்க.. பகீர் கிளப்பும் சவுக்கு சங்கர்.
230 எம்எல்ஏக்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஒரு தீர்மானத்தை ஏதோ உதவாத காரணங்களைச் சொல்லித் திருப்பி அனுப்புவது 8 கோடி மக்களை அவமதிக்கும் செயல் என கூறியுள்ளார்.
நீட் விலக்கு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்ப அது ஒன்றும் காதல் கடிதம் அல்ல, எட்டுக் கோடி தமிழக மக்களின் விருப்பம், ஆளுநர் அதை உதாசீனப்படுத்தி இருக்கிறார் என ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார். அதன் மூலம் மாநில உரிமை, மாநில சுயாட்சி என்ற போர்களம் பூண்ட பழைய திமுகவை மீண்டும் நாடும் ஆளுநரும் பார்க்கப் போகிறார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகள் எச்சரித்ததை போலவே ஆளுநருக்கும்- தமிழக முதல்வருக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது. தமிழக ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டபோதே அவரின் நியமனத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காவல்துறை பின்புலம் கொண்ட ஒருவரை தமிழக ஆளுநராக நியமிப்பதற்கு காரணம் என்ன என்றும், முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்வதற்கே ஆர்.என் ரவியை பாஜக நியமிக்கிறது என்றும் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் இந்த விவகாரத்தில் எந்த எதிர்வினையும் ஆற்றாது தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் ஆளுநர் என்பவர் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர் என்பதால் தமிழக முதல்வரே நேரில் சென்று ஆளுநரை வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருந்துவந்தது. பாஜகவும் திமுக கூட்டணி கட்சிகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஆளுநர் தமிழக முதல்வரை மனம் திறந்து பாராட்டி வந்தார். அது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் ஆளுநர் விவகாரத்தில் ஆரம்பம் முதலிருந்தே பட்டும்படாமலும் இருந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின், நீட் விவகாரத்தில் ஆளுநர் பாராமுகமாக இருந்து வருகிறார் என்பதையும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் உறுதியாகவே இருந்து வருகிறார்.
தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளாநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் காட்டமாக அறிக்கைவிட்டு தனது நிலைபாட்டை உறுதி செய்தார் ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாக சுதந்திர தின விழாவில் உரையாற்றிய ஆளுநர், பிறமாநில மாணவர்களைப் போல தமிழ்நாட்டு மாணவர்களும் பிற மொழியை பயில வேண்டும், நீட்டுக்கு முந்தைய காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை காட்டிலும் நீட் தேர்வுக்கு பின்னர் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்ற தொனியில் பேசினார். அவரின் இந்த பேச்சு கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்நிலையில்தான் ஆளுநர் நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்ப ப்பட்ட தீர்மானத்தை 8 மாதக் கால தாமத த்திற்கு பின் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இது தமிழக அரசை கொந்தளிப்படைய செய்துள்ளது.
இதனால் ஆளுநருக்கு எதிரான விமர்சனங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. திமுக கூட்டசி மற்றும் ஆதரவு இயக்கங்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகை யிட்டு போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்நிலைநில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. மீண்டும் ஒரு முறை நீட் விலக்கு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டி வரும்நிலையில், ஆளுநரின் செயல்பாடுகளை பலரும் பலவகையில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், ஆளுநர் தன்னை இன்னும் அதிகாரியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் திமுகவிடம் அது எடுபாடாது என விமர்சித்துள்ளார்.
மேலும், பாஜக அல்லாத மாநிலங்களில் அமைதியாக ஆட்சி நடக்கக்கூடாது என்பதில் உள்நோக்கம் தான் ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப காரணம். ஆளுநர் நாக்பூர் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பது தான் இதற்கு காரணம், இந்த சட்ட மசோதா என்பது ஏதோ ஒரு கட்சியின் மசோதா அல்ல, இது மக்களின் மசோதா, ஆட்சிக்கு வந்த து முதல் ஆளுநரிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு இல்லை, ஆனால் ஆளுநர் வேண்டுமென்றே மாநில அரசின் கோப்புகளில் கையப்பம் போடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதுகுறித்து அரசு உயர் அதிகாரிகள் சென்று ஆளுநரை சந்தித்தும் அவர் அதை கண்டுகொள்வதில்லை, ஆளுனர் என்பவர் எந்த கட்சி சார்ந்தும் செயல்படுபவராக இருக்கக் கூடாது. நடுநிலையாளராக செயல்பட வேண்டும். ஆனால் அதை அனைத்தையுமே ஆர்.என். ரவி மீறுகிறார். ஒரு மாநில ஆளுநர் என்பவர் ஆளுநரை போல நடந்து கொள்ள வேண்டும். மாநில அரசுக்கு வகுப்பு எடுக்க கூடாது, இன்னும் அதிகாரி என்ற மனநிலையிலேயே அளுநர் ஆர்.என் ரவி நடந்துகொள்கிறார்.
இவர் ஐபி ஸ்பெஷல் டைரக்டர் என்பது போலவும் ஸ்டாலின் ஏதோ இவருக்கு கீழ் பணி செய்கிற அதிகாரி போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறார். முதல்வர் அனுப்பியது ஏதோ காதல் கடிதம் அல்ல இதை திருப்பி அனுப்ப, எட்டு கோடி மக்களின் விருப்பம். இந்நிலையில்தான் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் மேற்கோள்காட்டி அறிக்கை ஒன்று கொடுத்துள்ளார். 230 எம்எல்ஏக்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஒரு தீர்மானத்தை ஏதோ உதவாத காரணங்களைச் சொல்லித் திருப்பி அனுப்புவது 8 கோடி மக்களை அவமதிக்கும் செயல் என கூறியுள்ளார். திமுக அரசு இப்போது ஆளுநருக்கு எதிராக போராட்டங்களிலும் இறங்கி விட்டது, ஆனால் ஆர். ரவிக்கு இது எல்லாம் போதாது.
சென்னாரெட்டிக்கு எதிராக ஜெயலலிதா அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தாரோ அதையெல்லாம் ஸ்டாலின் அரசு எடுக்க வேண்டும். அதனால்தான் இத்தனை மாதம் தயக்கம் காட்டி வந்த திமுக அரசு இனியும் பொறுத்துப் போவது அவசியம் இல்லை என திமுக 60 களில் ஒலித்த குரலில் மீண்டும் ஸ்டாலின் ஒலிக்க தொடங்கியுள்ளார். ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநர் என திமுக ஆரம்பித்துவிட்டது. இதுதான் பழைய திமுக, "முரசொலியில் கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா" என்ற கட்டுரையை படிக்கும்போது உணர்வுபூர்வமாக இருந்தது. இதை தான் திமுக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.