இது விஞ்ஞானிகளின் அமைச்சரவை! ராமதாஸ் கிண்டல்!
உலகிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளும் எடப்பாடி தலைமையிலான பினாமி அமைச்சரவையில்தான் அங்கம் வகிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுவதாக ராமதாஸ் கிண்டலாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை பயன்படுத்திக் கொண்ட திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகள் இரவு நேரங்களில் சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளன. இதில், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்க விட்டன. இதனால் நொய்யல் ஆறு நுரை பொங்க ஓடியது. ஆற்றில் நுரை பொங்கியது காரணமாக திருப்பூர் - ஈரோடு - கரூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர்.
இந்த நிலையில், இப்பிரச்சனை குறித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகளுடன் திருப்பூரில் நேற்று கலந்தாய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கவில்லை, வீடுகளின் சாக்கடை கழிவுகள்தான் கலந்துள்ளன; பொதுமக்கள் வீடுகளில் சோப்பு போட்டு குளித்ததால் ஏற்பட்ட நுரை கலந்ததால் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கியதாக கூறியிருந்தார்.
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அபத்தத்தின் உச்சம் என்பதைத் தவிர வேறல்ல என்று காட்டமாக கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தைப் பார்க்கும்போது உலகிலுள்ள அனைத்து விஞ்ஞானிகளும் எடப்பாடி தலைமையிலான பினாமி அமைச்சரவையில்தான் அங்கம் வகிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுவதாக ராமதாஸ் கிண்டலாக கூறியுள்ளார்.
நொய்யல் ஆற்றில் எந்த கழிவும் கலக்கவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சர் சொல்வதைவிட பெரிய பாவம் இருக்க முடியாது என்றும் இது மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனைவிட சாயப்பட்டறைகளின் நலனை முக்கியமாக கருதும் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன், இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது என்றும், அவரை உடனடியாக பினாமி முதலமைச்சர் பதவி நீக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்க இயலவில்லை எனில் அரசும் பதவி விலக வேண்டும் என்றும் ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.