இது சரியில்லே... மகேஷ் பொய்யாமொழி மீது சீறும் மு.க.ஸ்டாலின்..!
நினைத்த நேரம் திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்துவிடுகிறாராம் மகேஷ். தொடர்ந்து பண்ணை வீட்டு சந்திப்புகள் என அமர்க்களப்படுகிறதாம்.
மறைந்த தலைவர்கள் கருணாநிதி குடும்பத்திற்கும், அன்பில் தர்மலிங்கம் குடும்பத்திற்கும் இடையேயான உறவு நாடறிந்த விஷயமே. கருணாநிதி, தர்மலிங்கத்தை தொடர்ந்து ஸ்டாலின், பொய்யாமொழி, அதன் பின்னர் உதயநிதி, மகேஷ் என வாழையடி வாழையாக இந்த உறவு நீடிக்கிறது. நடுத்தர வயதில் மரணத்தைத் தழுவியவர் என்கிற வகையில் பொய்யாமொழி குடும்பத்தின் மீது ஸ்டாலினுக்கு தனிப்பட்ட கரிசனை உண்டு. இந்த ஒரே காரணத்தால் மகேஷ் பொய்யாமொழி ஒரே நாளில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக மகுடம் சூட்டப்பட்டார். உதயநிதியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் மகேஷ், ஸ்டாலின் வீட்டு சமையலறை வரை சர்வசாதாரணமாக சென்று வருபவர்.
உதயநிதி சினிமாவில் அடியெடுத்து வைத்த பிறகு அவரது நிழலாக இருந்த மகேஷ், திரையுலக கேளிக்கை கொண்டாட்டங்களில் ரொம்பவே விருப்பம் கொண்டவராம். இது ஒருபுறமிருக்க, சமீபகாலமாக சென்னை புறநகரிலுள்ள பண்ணை வீடுகளில் பல நாட்கள் உற்சாக சந்திப்புகள் நடைபெற்றிருக்கின்றன. இது பற்றி தகவல் தெரிய வந்ததும் ஸ்டாலின் வீட்டு கிச்சன் கேபினட்டும், ஸ்டாலினும் மகேஷையும், உதயையும் கண்டித்து இருகின்றனர். ஆனாலும் நிலைமை சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் மகேஷின் இளைஞரணி துணை அமைப்பாளர் பதவியை பறிக்கும் திட்டத்திற்கு வந்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால் உதயநிதியின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முடிவு ரத்தாகியிருக்கிறது.
இதன் பின்னர் இளைஞரணி துணை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மகேஷ், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது அவரிடம், ‘’பேசாமல் ஊரிலிருந்து கட்சிப் பணியைப் பார்க்கணும். தேவையில்லாமல் சென்னைக்கு வரக் கூடாது’’என எச்சரித்திருக்கிறார் ஸ்டாலின்.கொஞ்ச நாளைக்கு அடங்கி இருந்த உதயநிதியும், மகேஷூம் அண்மைக்காலமாக மீண்டும் பண்ணை வீட்டுக்கு படையெடுப்பதாக தகவல். நினைத்த நேரம் திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்துவிடுகிறாராம் மகேஷ். தொடர்ந்து பண்ணை வீட்டு சந்திப்புகள் என அமர்க்களப்படுகிறதாம். விஷயம் அரசல் புரசலாக தெரியவர கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம் ஸ்டாலின். ‘’இது சரியில்லை. உடனடியாக மாத்திக்கணும். இல்லாவிட்டால் வேற மாதிரி முடிவெடுக்க வேண்டியிருக்கும்’’என மகேஷிடம் நேரடியாகவே சீறியிருக்கிறார்.
‘’சும்மா இருக்கும் என்னை கூப்பிடறதே உதய்தான். ஆனால், பழி என் மீதா?’’என நெருங்கிய வட்டாரங்களில் மகேஷ் புலம்பித் தீர்க்கிறாராம்.