This is not a valid procedure - a former Speaker Aavudaiappan

அரசியல் காரணங்களுக்காக மட்டுமே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுருப்பதாகவும், இது சரியான நடைமுறை அல்ல என்றும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை, வாபஸ் பெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் அளித்தனர்.

இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவளித்து வந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சபாநாயகர் தனபாலின் இந்த உத்தரவை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சபாநாயகர் தனபாலின் உத்தரவு சட்டவிரோதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக தொடர்ந்த வழக்கில் இந்த மனுவும் இணைப்பு மனுவாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, வரும் 20 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் சபாநாயகரும், மூத்த வழக்கறிஞருமான ஆவுடையப்பன், சபாநாயகர் தனபால், அளித்த விளக்க நோட்டீசுக்கு பதில் அளிக்காததால் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் அதிமுகவில்தான் இப்போதும் நீடிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட அவர்கள், அந்த கட்சியிலேயே இப்போதும் நீடிக்கும் நிலையில், அவர்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்திருப்பது சட்ட விரோதமானது என்றும் ஆவுடையப்பன் கூறியுள்ளார்.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சட்டப்படி செல்லாது என்றும், அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றால் சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக மட்டுமே டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், இது சரியான நடைமுறை அல்ல என்றும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.