நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்று மத்திய அமைச்சரும், பிரதமர் ரேஸில் இருப்பவருமாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான ஊடகங்கள் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற இந்தி படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்பதை தெரிவித்து உள்ளன. சில கருத்துக்கணிப்புகள் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 300-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் தனது பணிகளை சிறப்பாக செய்து இருக் கிறார். அதைத்தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைய மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆனாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்று கூறி அதிர்ச்சி அடையச் செய்தார். தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் மோடி தலைமையில்தான் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். எனவே அவரது தலைமையில்தான் பாரதீய ஜனதா அரசு அமையும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.