5 மாசமா சம்பளம் கொடுக்கல இந்த அறிவாலய அரசு .. திமுக அரசை டார் டாரா கிழிக்கும் அண்ணாமலை.
ஊர்க்காவல் படைப் பணியை மட்டுமே, தான் செய்யும் முழுநேரத் தொழிலாக கொண்ட காவலருக்கு, வெறும் பத்து நாள் சம்பளம் போதாது என்ற உண்மை நிலையை உணர்ந்து மாநில அரசு அவர்களுக்கான ஊதியத்தையும் பணி காலத்தையும் உயர்த்தித் தரும் என்று தாம் நம்புவதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது….ஆனால் இப்போது செய்த வேலைக்கு சம்பளமாவது கொடுங்கள் என்று கையேந்தும் நிலைக்கு காவலர்கள் தள்ளப்படலாமா?
கடந்த 5 மாதகாலமாக ஊர் காவல் படையினருக்கு ஊதியம் வழங்கவில்லை என்ன பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
தமிழக காவல்துறையின் ஒரு துணை அமைப்பாகப் பணியாற்றும் ஊர்க்காவல்ப் படை, காவல் துறையினருக்கு உறுதுணையாக 1946ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், நோய்தொற்று, சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் ஊர் காவல் படையின் பங்கு அளப்பரியது.ஊர்காவல் படையினருக்கு காவலர்களுக்கான பயிற்சிக்கு இணையாக முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊர்க்காவல் படையின் சட்டம் 1963 பிரிவு 7-ல் காவல் துறையினருக்கு இணையான பொறுப்பும், அதிகாரம் ஊர்க்காவல் படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
காவல் துறையில் தன்னார்வத் தொண்டாக. பணியாற்றும் ஊர்க்காவல் படையினர், காவலர்களின் அனைத்து பணிகளையும் அதாவது வாகனம் ஓட்டுவது, போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது, இரவு ரோந்துப் பணிகள், பாதுகாப்புப் பணிகள் விஐபிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது, தேர்தல் கால பணிகள், நீதிமன்ற வழக்குகளுக்கு ஆஜராவது போன்ற காவல்துறையினர் செய்யும் அனைத்து பணிகளையும் ஊர்க்காவல் படையினரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 30 நாளும் அல்லது 25 நாட்களுக்கு வேலை வாங்கினாலும் அவர்களுக்கு வெறும் ஐந்து நாள் சம்பளமோ அல்லது பத்து நாள் சம்பளம் தான் வழங்கப்படுகிறது. அவர்கள் பணி செய்த காலம் முழுமையாகக் கணக்கிடப்படுவது இல்லை.
காவல் துறையிலே ஒப்பந்தப்படி, பகுதிநேரப்பணியாக ஊர்காவல் படையினர் இயங்கி வந்தாலும், பலர் இப்பணியை தங்கள் முழு நேரப்பணியாகவே செய்து வருகிறார்கள். அவர்களுக்கு 5 அல்லது 10 நாட்களுக்கான பணிக்காலம் மட்டும் வழங்கப்படும் என்ற அரசின் ஆணை G.O.Ms.No.115 dated December19, 2019, காரணமாக ஒவ்வொரு ஊர்க்காவல் படையினருக்கும் வெறும் 2800 அல்லது 5600 ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இத்தொகையானது, இன்றைய காலகட்டத்தில் எவருக்குமே மிகச் சொற்மானது. குடும்பம் நடத்த இத்தொகை போதுமானதாக இருக்காது என்பதை கருத்தில் கொண்டு நான் சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற பொறுப்புணர்வுடன், ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தேன்.
உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாண்புமிகு சஞ்சீவ் பேனர்ஜி, மாண்புமிகு. ஆதிகேசவலு அடங்கியோர் இவ்வழக்கை விசாரித்து, ஊர் காவல் படையின் சட்டப்பிரிவு 1963 ன்படி வெளியிடப்பட்ட அரசு ஆணை 115 (தேதி 19 12 2019) – ன்படி ஊர்க்காவல் படையின் ஒப்பந்த அடிப்படையில், ஐந்து அல்லது பத்து நாட்களுக்கு மட்டுமே பணியில் அமர்த்துவது என்பது குறைவு என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், நீதியரசர்கள் தங்கள் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில் ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்படும் ஒரு நாள் ஊதியம் மற்ற காவலர்களுக்கு கிடைக்கும் ஊதியத்திற்குச் சமமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். இப்படையில் பணியாற்றும் பெண்களும் ஆண்களும் இதையே தங்கள் முழு நேர தொழிலாகவும் கொண்டுள்ளனர் என்று மனுதாராகிய நான் குறிப்பிட்டுள்ள உண்மையையும், ஊர் காவல் படையினருக்கு வழங்கப்படும், பத்து நாள் சம்பளம் மட்டும் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு போதாது என்பதில் உள்ள நியாயத்தையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
ஊர்க்காவல் படைப் பணியை மட்டுமே, தான் செய்யும் முழுநேரத் தொழிலாக கொண்ட காவலருக்கு, வெறும் பத்து நாள் சம்பளம் போதாது என்ற உண்மை நிலையை உணர்ந்து மாநில அரசு அவர்களுக்கான ஊதியத்தையும் பணி காலத்தையும் உயர்த்தித் தரும் என்று தாம் நம்புவதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது….ஆனால் இப்போது செய்த வேலைக்கு சம்பளமாவது கொடுங்கள் என்று கையேந்தும் நிலைக்கு காவலர்கள் தள்ளப்படலாமா? வழக்கு முடிந்து 5 மாதங்களுக்கு மேலாகியும், நீதியரசர்கள் வழங்கியுள்ள இந்த தீர்ப்பை மதித்து, தமிழக அரசு இன்னமும் எந்த கொள்கை முடிவையும் எடுத்து அறிவிக்கவில்லை. மே மாதம் 10ஆம் தேதி முதல் ஜுன் மாதம் 21/2021 தேதிவரை கொரோனா பணிக் காலத்திற்கான ஊதியத்தை இன்னமும் அறிவாலயம் அரசு வழங்கவில்லை. ஒரு சில மாவட்டங்களைத் தவிர பல மாவட்டங்களில் கட்ந்த 5 மாத கால ஊதியம் வழங்கப்படவே இல்லை.
தன்னலம் பாராமல் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய ஊர்காவல் படையினருக்கு சம்பளம் வழங்காத மாநில அரசின் அலட்சியப் போக்கை, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நான் கண்டிக்கிறேன், ஊர்க்காவல் படையினரின் பணிக்கு ஏற்ற ஊதியமும், பணிக்கால அதிகரிப்பும், குறித்த காலத்தில் சம்பளமும் கொடுக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரையை, மாநில அரசு மீது தெரிவித்துள்ள நம்பிக்கையை மதித்து ஊர்காவல் படையினருக்கு ஊதிய அதிகரிப்புக்கான உத்தரவை வெளியிட வேண்டுமென்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேண்டுகிறேன்.