விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தங்களுடன் நெருங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவரது இந்த நிலைப்பாட்டுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்தையும் மிஞ்சும் வகையில் விழா நடைபெற்றது. அந்த வகையில், சென்னையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவுவிழா மிக எழுச்சியாகக் கொண்டாடப்பட உள்ளது. 

விழாவில், 7 லட்சம் பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர். தமிழகத்தில், இதுவரை நடைபெறாத நிகழ்ச்சியாக நூற்றாண்டு நிறைவுவிழா நடக்க உள்ளது. உலகம் பாராட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடக்கும் என்றார்.

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் ஹாசன், விழா தொடர்பான எந்த அழைப்பு வரவில்லை என்று கூறியது பற்றி செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், அனைவருக்குமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இது அரசு விழா. கலையுலகத்தில் எம்.ஜி.ஆருடன் யாரெல்லாம் நெருக்கமாக இருந்தார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆகையால், கமல்ஹாசன் கூறியதில் எள்ளளவும் உண்மை இல்லை. இது அரசி விழா என்பதால், கட்சி சார்பில் தனிப்பட்ட அழைப்பு விடுக்க முடியாது. 

அழைப்பு விடுத்தால் வருவேன் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அவரது இந்த நிலைப்பாடு, தங்களுடன் அவர் நெருங்கி வருகிறார் என்பதை தெளிவாக காட்டுகிறது என்றும் அவருக்கு வாழ்த்துக்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.