thirumavalavan condemns central govt
இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கால்நடை வர்த்தகத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள மத்திய அரசு, இனி இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக் கூடாது என்று அறிவித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசின் இம்முடிவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார். "மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடத்தவில்லை. ஆர்.எஸ்.எஸ். தான் ஆண்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவைப்படாது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாடு வியாபாரம் செய்தவர்களை அவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர்.

உத்திரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டை வெட்டியதாக முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். பின்னர் அது மாட்டிறைச்சி அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது."
"இந்த தடை உத்தரவு என்பது அதிர்ச்சி செய்தி அல்ல. எதிர்பார்த்த ஒன்று தான். இதனைக் காரணம் காட்டி சிறுபாண்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்க்கக் கூடிய அபாயம் உள்ளது. வகுப்புவாத சக்திக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும். "
"ஆடும்,மீனும் விலங்குகள் தான், ஏன் மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் மீது மட்டும் இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.இந்த உத்தரவு இஸ்லாமிய மக்களை நசுக்குகின்றன செயல்" இவ்வாறு திருமாவளவன் குறிப்பிட்டார்.
