தனி அறையில் அமைச்சர் வேட்புமனு பரிசீலனை... திருமங்கலத்தில் திமுகவினர் வாக்குவாதம்...!
திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை கடந்த 12ம் தேதி முதல் நேற்று மாலை 3 வரை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட 6,319 பேர் வேட்பு மனுக்களில், 5,363 ஆண்களும், 953 பெண்களும் அடக்குவர். திருநங்கைகள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இன்று காலை வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வேட்புமனுக்கள் நிராகரிப்பு, நிறுத்தி வைப்பு ஆகிய சம்பவங்களால் தேர்தல் நடத்தும் அலுவலருடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக சார்பில் மணிமாறன் உட்பட 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களுடைய வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் செளந்தர்யா முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வேட்புமனு பரிசீலனை நடக்கும் இடத்தில் அதிமுக சார்பில் அரசு வழக்கறிஞர்கள் வந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டனர். வேட்புமனு பரிசீலனையில் வெளிப்படை தன்மை இல்லை எனக்கூறி தேர்தல் நடத்தும் அலுவலருடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தனி அறையில் வைத்து வேட்புமனுக்களை பரிசீலிப்பதாக கூறி அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் மனுவை பரிசீலனை செய்து வந்தனர். அதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், அனைத்து வேட்பாளர்கள் மத்தியிலும் வெளிப்படையாக வேட்புமனு பரிசீலனை நடத்த வேண்டுமெனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.