அனைத்து கட்சி கூட்டத்தை வரவேற்றுள்ள திருமாவளவன் அக்டோபர் 6 அன்று அனைத்துவிவசாயிகள் கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட 10 லட்சம் பேர் பேரணி பற்றி தீர்மானம் போடாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் இன்று அறிவாலயத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் ஆராம்பத்தில் கலந்துகொள்வதாக அறிவித்த திருமாவளவன் பின்னர் மக்கள் நலக்கூட்டணியின் அழுத்தம் காரணமாக பின் வாங்கினார்.
இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டம் முடிந்து அதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சி திருமாவளவனிடம் பேட்டி எடுத்தபோது, அனைத்து கட்சி கூட்டத்தை தாம் வரவேற்பதாகவும், மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் தேதி நடந்த மறியலில் திமுக பங்கெடுத்தது பற்றியும், குறிப்பாக மு.க.ஸ்டாலின் பங்கெடுத்தது பற்றியும் தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.
கடந்த 6 ஆம் தேதி அனைத்துவிவசாயிகள் சங்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் அக் 17,18 ரயில் மறியல் செய்வது என்றும் , பின்னர் 10 லட்சம் மக்களை திரட்டி கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதில் அக்.17,18 ரயில் மறியல் வெற்றிகரமாக நடந்தது.
அதே போல் 10 லட்சம் பேர் பேரணி அடுத்து நடக்க வேண்டும். அதுகுறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுப்பார்கள் என எதிர்ப்பார்த்தேன் ஆனால் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிக்கிறது என விமர்சனம் செய்துள்ளார்.
