சென்னையை போல கொரோனா விஸ்வரூபம் எடுக்கப்போகும் 13 மாவட்டங்கள்... பிரபல மருத்துவர் கடும் எச்சரிக்கை..!
சென்னைக்கு அடுத்தபடியாக புதுச்சேரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சமடையலாம் என பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரையிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக புதுச்சேரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சமடையலாம் என பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ‘’பன்றிக்காய்ச்சல் எங்கெல்லாம் பரவியதோ, அங்கெல்லாம் கொரோனாவும் தாக்கும். அந்த அடிப்படையில் சென்னைக்கு அடுத்து மதுரை, திண்டுக்கல், வேலுார், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய, 13 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் கொரோனா உச்சமடைய வாய்ப்புள்ளது.
இதற்கான மூன்று காரணங்களில் முதலாவது மக்கள் தொகை அடர்த்தி. இந்நகரங்களில், மக்கள் நெரிசலாக வசிப்பதால் தீவிர பரவல் நிலை உண்டாகும். அடுத்தது அதிக மக்கள் பயணிக்கின்றனர். மாவட்டத்தின் புறநகர் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் இங்கு தினமும் அதிக மக்கள் போய் வருகின்றனர். கடைசியாக, அதிக மருத்துவமனைகள் அந்தப்பகுதிகளில் இருக்கின்றன. அதிக மக்கள் சிகிச்சைக்கு வரும்போது, வைரஸ் பரவல் தீவிரமடையும். எனவே, இந்த மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பும், மக்கள் ஒத்துழைப்பும் அவசியம்’’என்று அவர் எச்சரித்துள்ளார்.