மிகவும் நல்ல மனிதரான எடப்பாடி பழனிச்சாமி மீது எந்த குற்றச்சாட்டும் புகாரும் இல்லை. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் வருவது உறுதி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் பேசினார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ. கசாலியை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். காரில் இருந்தபடியே பிரசாரம் செய்து டாக்டர் ராமதாஸ் பேசினார்.
 “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு நல்ல கூட்டணி அமைந்துள்ளது. பொதுமக்கள் நலன், மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விஷயத்தில் பாமக ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதே இல்லை. எனவே, மக்கள் நலனுக்காக பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும். அந்த வகையில்தான் தமிழகம் காக்கப்பட அதிமுக-பாமக கூட்டணிக்கு மக்கள் அமோக வெற்றியைத் தேர்தலில் தேடி தர வேண்டும். மக்களின் ஆதரவுடன் அதிமுக கூட்டணி வெற்றி பெறப்போகிறது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் வருவது உறுதி.
மிகவும் நல்ல மனிதரான எடப்பாடி பழனிச்சாமி மீது எந்த குற்றச்சாட்டும் எந்தப் புகாரும் இல்லை. பாமக வேட்பாளர் கசாலிக்கு ஒருமுறை வாய்ப்பு அளித்து பாருங்கள். இந்தத் தொகுதி வளப்படுத்துவார். சென்னையைக் குப்பை இல்லாத தூய்மையான, அழகான நகரமாக மாற்ற எல்லா நடவடிக்கைகளிலும் பாமக ஈடுபடும். இலவசக் கல்வி, இலவச மருத்துவம், பேருந்துகளில் பெண்கள், குழந்தைகளுக்கு இலவச பயணம் இப்படி எண்ணற்ற திட்டங்களை பாமக வகுத்துள்ளது. எனவே, பாமக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்து தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி மலர செய்யுங்கள்.” என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred