தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதலா ஒரு நாள்கூட அவகாசம் கிடையாது.. உச்ச நீதிமன்றம் அதிரடி.!
உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதலாக ஒரு நாள் கூட அவகாசம் வழங்க மாட்டோம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்தது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் காலியாக உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் விரைவாக நடத்தக் கோரி உச்ச திமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், “நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் கால அவகாசம் கோரிய மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் அதிருப்தியைத் தெரிவித்தது. “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் ஏன் செயல்படுகிறீர்கள். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதலாக ஒரு நாள் கூட அவகாசம் தர மாட்டோம்” என்றும் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.
மேலும், “உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்கனவே மூன்று முறை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் அவகாசம் ஏன் தேவை” என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இன்னும் எத்தனை குறைந்த நாட்களில் தேர்தல் நடத்த முடியும் என்பதை 2 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாதங்கள் போதும் என்று தேர்தல் ஆணையம் தன்னுடைய வாதத்தை முன் வைத்தது.