தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடும் இல்லை.. ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை.. அடித்துசொல்கிறார் ஹெல்த் மினிஸ்டர்!
தமிழக மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை உள்பட எங்கேயும் ஆக்ஸிஜன் பற்றக்குறை இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பதே இல்லை. கொரோனா தடுப்பூசி வீணாகாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடுப்பு மருந்து வீணாகாமல் தடுப்பூசியை கையாள்வதற்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறோம். வீணாகும் தடுப்பூசியின் அளவை குறைக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் தங்கு தடையின்றி தடுப்பூசி கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
தற்போது பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தோடு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழக மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை உள்பட எங்கேயும் ஆக்ஸிஜன் பற்றக்குறை இல்லை. இங்கு 240 டன் ஆக்ஸிஜன் கையாளப்படுகிறது. அதேவேளையில் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போது 6 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. புனேவிலிருந்து வந்துள்ள கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.” என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.