”சட்ட விதி மீறல் எதுவும் இல்லை” - ஆய்வு குறித்து ஆளுநர் விளக்கம்...!
ஆளுநரின் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு சட்டத்தில் தடை ஏதும் இல்லை எனவும் மாவட்ட அதிகாரிகளை ஆளுநர் சந்தித்தது சட்டத்திற்கு விரோதமானது அல்ல எனவும் ஆளுநரின் முதன்மை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சில தினங்களுக்கு முன்பு கோவை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு பணி மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இதற்கு தமிழக அரசியல் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் அதிகாரத்திற்குள் இல்லாமல் எல்லை தாண்டுகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
ஆனால், ஆளுநரின் செயலுக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டு தெரிவித்தும் கடிதங்கள் குவிந்தன. தங்கள் மாவட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்து கடிதங்களும் வந்தனவாம்.
இதை அடுத்து, மற்ற மாவட்டங்களிலும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபடப் போவதாக, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடத்தினார் என்பதே தவறு எனவும் அரசின் திட்டங்களை கேட்டறிந்தார் எனவும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஆளுநர் தரப்பில் முதன்மை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஆளுநரின் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு சட்டத்தில் தடை ஏதும் இல்லை எனவும் மாவட்ட அதிகாரிகளை ஆளுநர் சந்தித்தது சட்டத்திற்கு விரோதமானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டதுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின் மூலம் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் நலத்திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.