எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை: தங்க. தமிழ்செல்வன்
எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை என்றும், அப்படி நினைத்திருந்தால் எங்கள் பக்கம் 100 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருப்பார்கள் என்றும் டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க. தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்த பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுட்டு வருகிறது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும், எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை எதிரணியினர், இழுக்கும் முற்சியை தவிர்ப்பதற்காக, புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்டு இன்று 9-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க. தமிழ்ச்செல்வன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்று மனு கொடுத்திருந்தோம். அது தொர்பாக ஏழு நாட்களுக்குள் எங்களை அழைப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
அவர் சொன்ன 7 நாட்கள் கெடு இன்றுடன் முடிவடைகிறது. இன்றைக்குள் ஆளுநர் எங்களை அழைத்துப் பேசாவிட்டால், அடுத்தகட்டமாக டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்து முறையிட உள்ளோம்.
பணத்துக்காக யாரும் இங்கு வந்து தங்கவில்லை. கட்சியைக் காப்பாற்றுவதற்காகவே, எம்எல்ஏக்கள் அனைவரும் புதுவையில் தங்கியுள்ளோம். பணம் கொடுத்து, விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.
அப்படி நினைத்திருந்தால், எங்கள் பக்கம் 100 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற திமுகவின் கேள்வி நியாயமானது.
என்று அவர் கூறினார்.