வயசாயிடுச்சே தவிர முதிர்ச்சி இல்லையே... ராமதாஸின் கள்ள மவுனம்... சூர்யாவுக்காக வரிந்து கட்டும் விசிக..!
தியேட்டரை கொளுத்துவோம். உதைத்தால்1லட்சம் பரிசு என மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக பிதற்றுகின்றனர்.
வயது ஆக ஆக பொறுப்பும், முதிர்ச்சியும் உருவாகுமென சொல்வார்கள். ஆனால் ராமதாஸ் அய்யாவின் கள்ள மவுனம் பொறுப்பற்று இருக்கிறது’’ என விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.
ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிடம் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் பாமவினர் ஜெய்பீம் தயாரிப்பாளர், இயக்குனர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுஅளித்தனர்.
நடிகர் சூரியா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மைபெயரை சூட்டிவிட்டு வேண்டுமென்றே வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் விதமாக அப்படத்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னிகுண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத்தலைர் குரு பெயரை அந்த வில்லனுக்கு வைத்து அவரது புகழுக்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களுடன் இனக்கமாக பழகிவரும் வேளையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு எதிராக வன்னியர்கள் செயல்படுவதுபோல் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்துவதுபோல் படத்தை எடுத்துள்ளனர். எனவே ஜெய்பீடம் பட தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்ட (பியர்லஸ் திரையரங்கிற்கு) பாமகவினர் வருவதை அறிந்த திரையரங்க நிர்வாகம் போஸ்டரைமாற்றி ஒட்டியது. திரையரங்கிற்கு வந்த பாமகவினர் திரைப்பட காட்சியை நிறுத்த சொன்னதால் ஒடிக்கொண்டிருந்த வேல் திரைப்படம் காட்சி நிறுத்தப்பட்டது.
நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் முழக்கமிட்டனர். அங்கிருந்த சூர்யாவின் போஸ்டர்களையும் அவர்கள் கிழித்தனர். இதனால் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பீதியில்
வெளியேறினர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூரியா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும், இந்த மாவட்டத்தில் சூரியாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் திரைப்பட காட்சியை நடத்த கூறினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நாங்கள் படத்தை மாற்றகொள்கிறோம் என்று கூறி காட்சிகளை ரத்து செய்தனர்.
இந்த சம்பவத்தால் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இதுகுறித்து பாமக தலைமையோ, நிறுவனர் ராமதாஸோ, எந்த விதமான ரியாக்சனும் காட்டவில்லை. இதனைக் கண்டித்துள்ள விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, '’பாமவினர் நடிகர் சூர்யா மீது வன்மத்தை ஆளாளுக்கு கக்கி வருகின்றனர். தியேட்டரை கொளுத்துவோம். உதைத்தால்1லட்சம் பரிசு என மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக பிதற்றுகின்றனர்.
வயது ஆக ஆக பொறுப்பும், முதிர்ச்சியும் உருவாகுமென சொல்வார்கள். ஆனால் ராமதாஸ் அய்யாவின் கள்ள மவுனம் பொறுப்பற்று இருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.