ஆளுங்கட்சி என்ற பீலிங்கே இல்ல.. போலீஸ் எங்கள மதிக்கிறது இல்ல.. ஸ்டாலினை நொந்துக் கொண்ட ஆர்.எஸ் பாரதி.
ஆளுங்கட்சியாக வந்து விட்டோம் என்ற பீலிங்கே திமுக தொண்டனுக்கு கிடையாது. எங்கள் கட்சி ஆட்களை எந்த காவல்துறை அதிகாரியும் மதிப்பதில்லை. எங்கள் தலைவர் யாரும் காவல் நிலையத்திற்கு போகக்கூடாது என உத்தரவு போட்டுள்ளார்.
ஆளுங்கட்சி என்கிற பீலிங் கொஞ்சம்கூட இல்லை இப்போதெல்லாம் காவல்துறை எங்களை மதிப்பதே இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நொந்து கொண்டுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்றும், காவல்துறை முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் விமர்சித்துள்ள நிலையில் ஆர்.எஸ் பாரதி இவ்வாறு கூறியுள்ளார்.
பத்தாண்டுகள் பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அரசு கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். கொரோனா காலத்தில் அரசு செயல்பட்ட விதம் மற்றும் மழை வெள்ளத்தின் போது முதல்வர் உட்பட அரசு இயந்திரம் களத்தில் இறங்கி செயலாற்றியது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளானா அதிமுக, பாஜகவோ, அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக என விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவைவிட ஒரு படி மேலே போய் பாஜக திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. சட்டமன்றத்தில் அதிமுக எதிர்க்கட்சி என்றாலும்கூட மக்கள் மன்றத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க, இதேநேரத்தில் பாஜகவின் ஆதரவாளர்களென சமூக வலைத்தளத்தில் திமுகவை வசித்து வருபவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கைகளை அண்ணாமலை மிகக் கடுமையாக கண்டித்து வருகிறார். குறிப்பாக யூடியூப்பர் மாரிதாஸ் கைதுக்கு அண்ணாமலை திமுகவையும், காவல் துறையையும் கடுமையாக விமர்சித்தார். இதே நிலை தொடர்ந்தால் பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றும் அது அரசுக்கு இறுதி எச்சரிக்கை என்றும் அவர் கூறியுள்ளார். 17 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது இத்துடன் தனது மிரட்டல் நடவடிக்கைகளை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார். அதேபோல் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு குறித்தும் அண்ணாமலை மிக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது தமிழக காவல் துறை திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கட்டுப்பாட்டில் எதுவுமில்லை. சைக்கிளிங் போவதற்கும், செல்பி எடுப்பதற்கும்தான் டிஜிபி பதவி உள்ளது.
வெளிப்படையாகவே சொல்கிறேன் காவல்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டுக்குள் இல்லவே இல்லை என்றும், திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் டிஜிபியும் காவல்துறையும் உள்ளது என்றார். அண்ணாமலையின் இந்த விமர்சனம் திமுக ஆதரவாளர்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக டிஜிபி குறித்து கருத்து கூறுவதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை என விமர்சித்திருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் கருத்து எதுவும் கூறாமல் டிஜிபி மௌனமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நேரலையில் வந்த டிஜிபி சைலேந்திரபாபு, இரண்டு மணி நேரத்தில் 58 கிலோ மீட்டர் சைக்கிளில் கடந்திருக்கிறோம். இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் நிச்சயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், நல்ல பழக்க வழக்கங்களை கைவிட முடியாது, நல்லதை சொல்வோம் நல்லது செய்வோம்.. தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவார் போற்றட்டும் என பதிவிட்டிருந்தார். இரு விவாதப்பொருளாகவும் மாறியது.
இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கு இடையே உள்ள உறவு குறித்து பேசியுள்ளார். அதில் அண்ணாமலை தமிழக காவல் துறை திமுகவினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக குற்றஞ்சாட்டுகிறாரே என நெறியார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலையை பற்றி பேச வேண்டாம் என்று நினைத்தேன்.. நீங்கள் கேள்வி கேட்பதால் கூறுகிறேன். அண்ணாமலை காவல் அதிகாரியாக இருந்தவர். காவல் அதிகாரியாக இருந்த அவரை பாஜகவினர் அப்படித்தான் பயன்படுத்தினார்களா? என்று எங்களுக்கு தெரியாது. இப்போது திமுகவில் கட்சிக்காரர்களிடம் இருக்கிற ஒரு மனக்குறை என்னவென்றா, ஆளுங்கட்சியாக வந்து விட்டோம் என்ற பீலிங்கே திமுக தொண்டனுக்கு கிடையாது. எங்கள் கட்சி ஆட்களை எந்த காவல்துறை அதிகாரியும் மதிப்பதில்லை. எங்கள் தலைவர் யாரும் காவல் நிலையத்திற்கு போகக்கூடாது என உத்தரவு போட்டுள்ளார். எந்த அரசு அலுவலகங்களுக்கும் போகக்கூடாது என்றும், எந்த ஒரு கோரிக்கையாக இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினரின் வாயிலாகத்தான் போகவேண்டும் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகத்தான் போக வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளார்.
ஆக திமுக தொண்டர்கள் காவல் நிலையத்திற்கு போக முடியவில்லையே என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அண்ணாமலை காவல்துறையை திமுக தொண்டர்கள் கட்டுப்படுத்துகிறார்கள் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது என்றால், பாமரமக்கள், படிக்கத் தெரியாதவர்கள், எழுதத் தெரியாதவர்கள், அப்பாவிகளை போலீசார் விசாரணைக்கு அழைக்கும் போது அவர்கள் பயப்படுவது வழக்கம். அப்போது அவர்கள் வழக்கறிஞர்களை விட கட்சிக்காரர்களையே அணுகுவார்கள். அதுதான் வழக்கம் ஏன் என்றால் அவர்கள்தான் ஈஸி அக்சஸ் அரசியல் வாதிகள்தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்சிக்காரர்கள் காவல் நிலையத்திற்கு போகக்கூடாது என முதல்வர் கூறிவிட்டார். காவல் நிலையத்தில் கட்சிக்காரர்களின் கால் படக்கூடாது என உத்தரவு போட்டுவிட்டார் என ஆர்.எஸ் பாரதி வந்து கொண்டுள்ளார்.