வரும் சட்டமன்ற தேர்தலில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி போட்டி இல்லை.. அர்ஜூன மூர்த்தி அந்தர் பல்டி.
இந்தச் சூழ்நிலையில் ஏப்ரல் 6-2021 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தற்போதைய தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி பங்கேற்க வேண்டாம் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி முடிவு செய்துள்ளது.
தேர்தலை சந்திப்பதற்கு போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களது இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி போட்டியிடாது என அக்காட்சியில் நிறுவனத்தலைவர் அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம்:
தமிழக அரசியல் ஒரு மாற்றத்தின் அவசியமும், நாம் தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்கு ஒரு முற்போக்கான மற்றும் நேர்மையான அரசியல் கட்சியின் வலுவான தேவையும் தான் ஒரு புதிய அரசியல் கட்சியான நமது இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி உருவாவதற்கு காரணமாக அமைந்தது. பிப்ரவரி 26-2021 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு நாளைக்கு பிறகு 27 ஆம் தேதி இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. ஆரம்ப கட்ட முயற்சியாக வரும் 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பங்கேற்க வேண்டும் என்ற திட்டமும் கட்சிக்கு இருந்தது.
கால அவகாசம் போதாமையால் நேரத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் இருந்தோம். இருந்தும் 2021 மார்ச் 9ஆம் தேதி எங்கள் புதுமையான, மிக்க நம்பிக்கை அளிக்கும் சின்னமான ரோபோட் என்ற எந்திரன் மற்றும் எங்கள் புரட்சிகரமான எண்ணங்களை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் வரவேற்றன.
அடுத்த சில நாட்களிலேயே எங்கள் இ.ம.மு கட்சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு நலன் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மற்ற முன்னணி அரசியல் கட்சிகள் தமது தேர்தல் வாக்குறுதிகளில் உள்ளடக்கி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் சிறந்த நலனுக்காக எங்கள் புதுமையான மற்றும் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையை அதன் சாராம்சமான கருத்துக்களை அவர்கள் வழிமொழிந்ததை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், காலத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் களம் இறக்கப்பட்டுள்ளோம்.
எங்கள் சத்தியம், சமத்துவம் மற்றும் சமர்ப்பணம் என்ற கொள்கைகள் தான் எமது அனைத்து பணிகளுக்கும் செயல் முறைகளுக்கும் வழிகாட்டுகின்றன. அனைத்து தொகுதிகளுக்கும் அலைமோதும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிலிருந்து வேட்பாளர்களை தரம் அறிந்து தேர்வு செய்தல் தேவையான மற்ற வளங்கள் சேகரிப்பு மற்றும் சீரிய நிர்வாகம் அனைத்து தொகுதிகளிலும் ரோபோட் சின்னத்திற்கான தொழில்நுட்ப வரிசைப்படுத்துதல், எடுத்துச்செல்வது, மாநிலம் முழுவதும் திட்டமிட்டபடி விரிவான கள பிரச்சாரம் செய்தல் போன்ற அனைத்து செயல்பாடுகளும் இந்த குறுகிய காலத்தில் முழுமையான தரத்தில் கையாளுவதற்கு நமக்கு இடம் தரவில்லை என்பதே உண்மை.
இந்தச் சூழ்நிலையில் ஏப்ரல் 6-2021 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தற்போதைய தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி பங்கேற்க வேண்டாம் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி முடிவு செய்துள்ளது.
நாங்கள் தொடர்ந்து எங்கள் கொள்கையின் அடிப்படையில் களபலத்தை வளர்த்துக் கொள்வோம், மேலும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்று சக்தியாக இருப்பதற்கான எங்கள் பணியை வலுப்படுத்துவோம். அனைவரின் ஆதரவோடு சற்றும் தொய்வில்லாமல் நமது மாநிலத்துக்கும், நாட்டிற்கும், சத்தியம், சமத்துவம் மற்றும் சமர்ப்பணம் ஆகிய எங்கள் கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து சேவை செய்வோம்.
எங்கள் கட்சிக்கு அளித்த மகத்தான ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் பொது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. இந்த தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைக்கவும், ஒத்துழைப்பு தர விரும்பிய மற்ற கட்சிகள், அமைப்புகள், அனைத்து கட்சி உறுப்பினர்கள், கட்சித் தலைமை குழுவினருக்கு மனமார்ந்த நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறோம். ஒரு சிறந்த வாழ்வாதார முன்னேற்றத்திற்கான சமுதாயம் உருவாவதற்கும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கும் நாங்கள் இடைவிடாமல் தொடர்ந்து செயல்படுவோம் என்று உங்களுக்கு மீண்டும் உறுதி அளிக்கிறோம். என அர்ஜுன மூர்த்தி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.